Friday, October 30, 2009

கலிப்பா


கலிப்பா என்பது தமிழில் உள்ள செய்யுள் வகைகளுள் ஒன்று. இன்று கிடைக்கும் பழந்தமிழ் நூல்களுள் கலித்தொகை மட்டுமே கலிப்பாவினால் ஆன நூல் ஆகும். இதைவிடக் கலம்பகம் எனப்படும் நூல் வகையில் முதற் செய்யுளாகவும் கலிப்பாக்கள் காணப்படுகின்றன.

கலிப்பா துள்ளலோசையை அடிப்படையாகக் கொண்டது. துள்ளலோசை, சீர்களுக்கு இடையே அமையும் கலித்தளையால் விளைவதால், இத் தளையே கலிப்பாவுக்கு உரியது. எனினும் கலிப்பாவில் கலித்தளை மட்டுமே வரவேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது. இதில் கலித்தளையே அதிகமாக இருப்பினும் பிற வகைத் தளைகளும் வரலாம். கலிப்பா பொதுவாக அளவடி எனப்படும் நான்கு சீர்களைக் கொண்ட அடிகளைக் கொண்டிருக்கும்.

கலிப்பா உறுப்புக்கள்


பிறவகைப் பாக்கள் ஒரே உறுப்பாக அமைவது போல் இல்லாமல், கலிப்பா பல உறுப்புக்களைக் கொண்டு அமைகிறது. இவ்வுறுப்புக்கள், 1. தரவு, 2. தாளிசை, 3. அராகம், 4. அம்போதரங்கம், 5. தனிச்சொல், 6. சுரிதகம் எனும் ஆறு ஆகும்.

கலிப்பா வகைகள்


மேற்கூறியவற்றில் எந்தெந்த உறுப்புக்கள் அமைகின்றன, அவற்றின் எண்ணிக்கை, ஒழுங்கு என்பவற்றைப் பொறுத்துக் கலிப்பா மூன்று முதன்மை வகைகளாகப் பிரிக்கப்படுகின்றது. இவை,


1.    ஒத்தாழிசைக் கலிப்பா
2.    வெண் கலிப்பா
3.    கொச்சகக் கலிப்பா


என்பனவாகும். இவற்றுள் வெண் கலிப்பா தவிர்ந்த ஏனைய இரண்டு வகைக் கலிப்பாக்களுக்கும் துணை வகைகள் உண்டு. ஒத்தாழிசைக் கலிப்பாக்களுக்கு,


1.    நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா
2.    அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா
3.    வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா


என மூன்று துணைப்பிரிவுகளும், கொச்சகக் கலிப்பாவுக்கு,


1.    தரவுக் கொச்சகம்
2.    தரவிணைக் கொச்சகம்
3.    சிஃறாழிசைக் கொச்சகம்
4.    பஃறாளிசைக் கொச்சகம்
5.    மயங்கிசைக் கொச்சகம்


என ஐந்து துணைப்பிரிவுகளும் உள்ளன.


No comments:

Post a Comment